எங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது: முக ஸ்டாலின்!

அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று எங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

“முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோவில்களின் விடியலுக்கும் வழிகாட்டியாக உள்ளது” என்று பல்வேறு மடாதிபதிகள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. நாளை மாணவர்களின் பசியாற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அது விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய அந்தத் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து அதை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஏக்கத்தை போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம்தான் காலை உணவுத் திட்டம்!

அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று எங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் குருமகா சந்நிதானங்களும் தமிழ்நாட்டு மக்களும் எங்களை – ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மீகப் பெரியவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள். போராடி இருக்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இனம் – மொழி – நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தனது பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாகச் செலுத்தியதைப் போல இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட்ட வேண்டும். தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் – இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான், இதுபோன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்.

இங்குள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கல்வியில் மிக மிக உயரங்களை நீங்கள் அடைய வேண்டும். நேற்று சந்திரயான் – 3 விண்கலம் நிலாவில் தரையிறங்கிருப்பதன் மூலமாக, நமது இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்கு பின்னால், சந்திரயான் – 3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர், நமது தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் அவர்கள். அது மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் போன்ற அறிவியலாளர்களை, கல்வியில் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனைகள் படைக்க வேண்டும். அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு – செயல்படுவதற்கான உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறோம். இது எனது அரசல்ல, நமது அரசு. மீண்டும் சொல்லுகிறேன். இது எனது அரசல்ல, நமது அரசு. இவ்வாறு அவர் பேசினார்.