கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: கனகராஜ் சகோதரர்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஓபிஎஸ் அணி சார்பாக இது தொடர்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த சூழலில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் தனது சகோதரரும் ஜெயலலிதாவின் ஓட்டுநருமான கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை என்றும் அது திட்டமிட்ட சதி என்றும் அவரது சகோதரர் தனபால் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த ஆவணங்கள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த சில தினங்களில் ஏப்ரல் 29ஆம் தேதி ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜூலை 3ஆம் தேதி சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

கனகராஜின் மரணம் விபத்து அல்ல கொலை என்று அவரது அண்ணன் தனபால் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொடநாடு நாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய எனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். அப்போது கொடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் ஐந்து பெரிய பைகளை எடுத்து வந்தார். அதில், ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். மூன்று பைகளை சங்ககிரியிலும், இரண்டு பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய நிலையில் தான் ஆத்தூரில் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை” என தனபால் கூறியுள்ளார்

மேலும் அவர், “கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். எடப்பாடிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இதுகுறித்து தெரியவரும். எனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனக்கும் பாதுகாப்பு வேண்டும்” என்று தனபால் கூறியுள்ளார்.