பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்!

“தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்கள், அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71 வயது ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவுக்காக காலை 11 மணி அளவில் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். பின்னர் விஜயகாந்த் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் தனது பிறந்தநாள் மற்றும் கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது மட்டுமே தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்த தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். பிறந்தநாளையொட்டி இன்று காலை மற்றும் மதிய உணவுக்கு கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் இட்லி, பொங்கல் வடையுடன் வழங்கப்பட்டது. மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச் சுட மதிய சாப்பாடு பரிமாறப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன. விஜயகாந்தை சந்தித்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரோடு போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க. அலுவலகம் இன்று களை கட்டி காணப்பட்டது.

பின்னர் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தேமுதிக தலைவர் பொறுப்பு விஜய பிரபாகரனுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னுடன் சேர்த்து இங்கு இருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கியவர் விஜயகாந்த். எனவே, அவர்தான் யாருக்கு, எப்போது, என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வார். சென்னையில் விரைவில் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும். தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. தமிழகம் முழுவதும் நான் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டுதான் இருக்கிறேன். கட்சி நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. கட்சிக்கு எந்தத் தொய்வும் இல்லை. கட்சியில் ஒரு பிரச்சினையும் இல்லை. இன்னும் நாங்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. விஜயகாந்த் எந்த இலக்கை நோக்கை இந்த கட்சியைத் தொடங்கினாரோ, அந்த இலக்கை நாங்கள் நிச்சயம் அடைவோம்” என்றார்.

சென்னை சாலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் இருக்கும் அனைத்து சாலைகளும் இன்றைக்கு படுமோசமாக இருக்கிறது. மழைநீர் வடிகால் மற்றும் மெட்ரோ பணிகளுக்காக பல்வேறு இடங்களில் பள்ளங்களைத் தோண்டிவிட்டு அப்படியே வைத்துள்ளனர். சிங்காரச் சென்னை என்றனர், சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்றனர். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம் முதல்வரே, சிறப்பான சென்னையை கொடுங்கள் அதுபோதும் என்று மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களிடம் உங்களது ஆட்சியைப் பற்றி கேட்டுப் பாருங்கள். பலருக்கும் முதுகுத்தண்டு வலி ஏற்பட்டிருக்கிறது. குண்டும் குழியுமான சென்னை சாலைகளில் பயணிக்க முடியாமல், அனைத்து வாகனங்களும் பழுதடைந்து, பலரும் மிகப் பெரிய சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், சென்னை மாநகராட்சியைக் கண்டித்து தேமுதிக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. தனது மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‘படைத் தலைவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.

விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தயவுசெய்து ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் தவறாக எழுதாதீர்கள். காரணம், கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்களே, அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்” என்று அவர் கூறினார்.