நமது மல்யுத்த சகோதரிகளை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது: மம்தா பானர்ஜி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இந்தத் தேர்தல் மூலம் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்தல் கடந்த 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இந்தச் சூழலில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாத காரணத்தால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்து வரும் தொடர்களில் இந்தியா அல்லாத தனி கொடியின் கீழ் விளையாட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். இது ஒட்டுமொத்த தேசத்துக்கே அவமானம் என்று ஒன்றிய அரசு மீது விமர்சனம் செய்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகளின் அவல நிலையை கண்டு வெட்கக்கேடான பிடிவாதத்துடன் நமது மல்யுத்த சகோதரிகளை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. போராடி வரும் மகள்களின் கண்ணியத்துக்காக நிற்க முடியாதவர்களை இந்தியா எதிர்த்து நின்று தண்டிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.