‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: நிதிஷ்குமார்

மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் கூட்டத்தின்போது, ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று நிதிஷ்குமார் கூறினார்.

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணிைய உருவாக்கி உள்ளன. அதன் முதல் கூட்டம், பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளிலும் நடந்தது. அடுத்த கூட்டம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் மும்பையில் நடக்கிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில் நடைபெற உள்ள ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியின் வியூகம் குறித்து விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு உள்பட தேர்தல் தொடர்பான விவரங்களும் ஆலோசிக்கப்படும். கூட்டணியின் இதர செயல்திட்டங்கள் இறுதி செய்யப்படும். அந்த கூட்டத்தின்போது, கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணையும். கூட்டணியில், எவ்வளவு அதிகமான கட்சிகளை சேர்க்க முடியுமோ, அவ்வளவு கட்சிகளை சேர்க்க விரும்புகிறேன். அந்த திசையில்தான் எனது பயணம் இருக்கிறது. மற்றபடி எனக்கென எந்த ஆசையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.