பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: வானதி சீனிவாசன்

பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் ஆயுஷ்மான் பாரத் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை பெற பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமை பா.ஜனதாவை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்று முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். கோவை மாநகராட்சி பகுதிகளில் லஞ்சம் அதிகரித்து விட்டது. மக்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள். எனவே லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க ஹெல்ப்லைன் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தொடர்பு எண் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துவதை தவிர மற்ற எந்த வேலைகளையும் செய்வது இல்லை. தி.மு.க. விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி. அப்பழுக்கற்ற பிரதமரை பற்றி குறை சொல்ல தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. முரண்பாடு இல்லை பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை. இந்த கூட்டணியில் வேறு யாரெல்லாம் இணைகிறார்கள் என்பது டிசம்பர் மாதத்துக்குள் தெரிந்து விடும்.

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை போராடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூண்டி விடுகிறார். இந்த விஷயத்தில் தி.மு.க. அரசும், அமைச்சர்களும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்யாமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். அ.தி.மு.க. நீட் தேர்வை எதிர்த்தாலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.