கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னர், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாய சங்க நிர்வாகிகள் என்.வி. கண்ணன், செந்தில்குமார், ஜீவகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தரை நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கோரியும், தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கமன மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள், குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரி நீர் கோரி பானைகளை காவடியாகத் தூக்கி வந்து கலெக்டரிடம் மனு அளித்து முறையிட்டனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.