எரிவாயு சிலிண்டர் விலை 2014-ல் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட குறைவு: வானதி

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 200 ரூபாயும், உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் குறைத்தது சாதனை என்றால் அதைவிட பெரும் சாதனை, 14.50 கோடி இணைப்புகளை 33 கோடியாக உயர்த்தியது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமயில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி சிலிண்டர் 900 ரூபாய்க்கு கிடைக்கும். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டரின் விலை 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இனி 700 ரூபாய்க்கு சிலிண்டர் பெற முடியும். இதனால் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பயன் பெறுவார்கள். இதற்காக பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நேரடி பலனைக் கொடுக்கும் சமையல் எரிவாயு விலை குறைப்பை எதிர்க்கட்சிகள் வழக்கம் போல, விமர்சனம் செய்து வருகின்றன. அவர்களது அறிக்கை, பேச்சு, பேட்டிகளிலும்,சமூக ஊடகப் பதிவுகளில், மக்களுக்கு பயன் கிடைத்து விட்டதே, பிரதமர் மோடி அரசுக்கு குறையாமல் இருக்கும் மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்து விடுமே என்கிற அச்சமும், பதற்றமும் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளில், 2014-ல் காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியை விட்டு வெளியேறும் போது, சமையல் எரிவாயு விலை குறைவாக இருந்தது போலவும், பாஜக ஆட்சியில் தான் அது அதிகரித்தது போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், உண்மை அதற்கு நேர் மாறானது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில், 14.2 கிலோ எடை கொண்ட, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 1,234 ரூபாயாக இருந்தது. கொல்கத்தாவில் 1,270 ரூபாயாக இருந்தது. பாஜக ஆட்சியில் 2023 மார்ச் 1ஆம் தேதி 1,118 ரூபாய் 50 பைசாவாக இருந்தது. 2020 மே 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 569 ரூபாய் 50 பைசா ஆக இருந்தது. அதாவது 2014ஆம் ஆண்டில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, கிட்டத்தட்ட பாதி விலைக்கு விற்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014-ல் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட குறைவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு இதைவிட நற்சான்று இருக்க முடியாது. இந்த புள்ளிவிவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://iocl.com/indane-14Kg-nonsubsid-previous-price இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, 14 கோடியே 50 லட்சம் மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தனர். பாஜக ஆட்சியில் அந்த எண்ணிக்கை 33 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாய் இணைப்பு பெற்றவர்கள் 9 கோடியே 60 லட்சம் பேர். சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 200 ரூபாயும், உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் குறைத்தது சாதனை என்றால் அதைவிட பெரும் சாதனை, 14.50 கோடி இணைப்புகளை 33 கோடியாக உயர்த்தியது. இந்த உண்மைகளை எல்லாம், இவற்றை நேரடியாக அனுபவித்து வரும் பொதுமக்கள் நன்கறிவார்கள். அதனால்தான், எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளை நம்பாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர்த்த இருக்கிறார்கள்.

‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

1. இந்த கூட்டத்திலாவது கூட்டணியின் தலைவர் அதாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா?

2. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரின் கோரிக்கை பற்றி கூட்டணியில் மற்ற கட்சிகளின் கருத்து என்ன?

3. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோர் கூறியதற்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பதில் என்ன?

4. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி வைக்குமா? தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளுமா?

5. கேரளத்தில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்க முடியுமா?

6. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எப்படி தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப்போகிறது?

7. உத்தர பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்த சமாஜ்வாதி கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது? கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒதுக்கும் ரேபரேலி, அமேதி தொகுதிகள் மட்டும்தானா?

8. திமுக அமைச்சர்களின் பிரிவினைவாத பேச்சுகள் பற்றியும், அந்நிய ஆங்கிலத்திற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு, இந்தி மொழிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்து வரும் திமுக பற்றி மும்பை கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? இது குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?

9. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் கட்சி. அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதுபற்றி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?

10. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான, திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராடி வருகிறது. நீட் தேர்வு இருக்காது என பொய்யான வாக்குறுதியை திமுக திரும்பத் திரும்ப அளித்து வருவதால் தமிழ்நாடு மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ள கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீட் தேர்வு குறித்து என்ன நினைக்கின்றன? திமுகவுடன் உடன்படுகிறதா? முரண்படுகிறதா? இன்னும் கேள்விகள் நிறைய இருக்கின்றன. திரும்பத் திரும்ப கேட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.