ஜெயலலிதா சொத்துகள் ஏலம்: ஜெ.தீபாவின் மனு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள, ஏலம் விட வேண்டிய சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியலை அளிக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம், புடவை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி, “வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை 31ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மனு தாக்கல் செய்திருந்தார். ஜெ.தீபாவின் மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட 6 பினாமி நிறுவனங்களில் உள்ள 65 அசையும், அசையா சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய 35 நாட்கள் கால அவகாசம் வழங்கி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.