‘இந்தியா’ கூட்டம் பாஜகவுக்கு பயத்தை கொடுத்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்!

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிட அரசாணை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கல்வி, ஒரே மொழி என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை திமுக தொடர்ந்து எதிர்க்கும். மத்திய பாஜக அரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கொள்கை வித்தியாசங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம், பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். பயத்தின் வெளிப்பாடே 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை அப்படிச் செய்ததில்லை. இவை அனைத்தும் பாஜகவின் பயத்தின் வெளிப்பாடு தான்.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து பொறாமைப் படுகின்றனர். மாபெரும் மாற்றத்தை உருவாக்க இருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய செய்தித்தாளை நேரடியாக கண்டிக்கும் புரிதலும், துணிவும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழு வெற்றி. ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி இறங்கி போராட வேண்டும். தமிழக குழந்தைகளை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசும், முதல்வரும் இருப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீட் ஒழிப்புப் போராளி அனிதா நம்மை விட்டுப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. 1,000ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் இருக்கும். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீட்டை ஒழித்துக் கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.