எங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது: சீமான்

தான் பயந்துவிட்டதாக அண்ணாமலை கூறியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது என்று சீமான் கூறியுள்ளார்.

தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிரடியாக புகார் அளித்தார். மேலும், மகளிர் நீதிமன்றத்திலும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும், வாக்குமூலத்தையும் அளித்திருக்கிறார் விஜயலட்சுமி. இதில் சீமான் மீது குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சீமானின் பேச்சில் பல மாற்றங்கள் தெரிந்தது. இதுவரை திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான், சற்று தனது டோனை குறைத்துக் கொண்டிருக்கிறார். உதாரணமாக, திராவிடத்தை ஒழிப்பதே எங்கள் லட்சியம் எனக் கூறி வந்த சீமான், பேசும் போது “திராவிடத்தை ஒழிப்பது எங்கள் நோக்கம் அல்ல.. தமிழ் தேசியத்தை வளர்ப்பதுதான் நோக்கம்” என சாஃப்ட் டோனில் பேசினார்.

சீமானிடம் தென்பட்ட இந்த மாற்றத்தை வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரை கிண்டலடித்தார். “சீமான் அண்ணனை ஒரு தைரியமான ஆளுனு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் ஒரே ஒரு கேஸு அண்ணனை எப்படி பயப்பட வெச்சிருக்குனு பாருங்க. திமுகவுக்கு இப்படி சப்போர்ட் பண்றதுக்கு பேசாம திமுக பி டீம்னு சீமான் சொல்லிட வேண்டியதுதானே” என அணணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை இப்படி கூறியது குறித்து சீமானிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னது பயமா.. பயம் எங்க பரம்பரைக்கே கிடையாது தம்பி. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்க இனப் பரம்பரைக்கே கிடையாது. பயம் என்பது கோழைகளின் தோழன்; வீரனின் எதிரி. என்னை பார்த்தால் பயப்படுற ஆள் மாதிரியா தெரியுது. இந்த வழக்கு என்ன எனக்கு புதுசா.. 13 வருஷமாக பார்த்துட்டு இருக்கேன். என் மீது 128 வழக்குகள் இருக்கு. எத்தனை முறை சிறைக்கு போய்ட்டு வந்துருப்பேன். அண்ணாமலை ஒரு நாளாவது சிறைக்கு போனதுண்டா? திமுக சொத்துப் பட்டியலை நீங்க வெளியிட்டீங்க. ஏன் அதிமுக சொத்துப் பட்டியலை வெளியே விடல. அப்போ நீ பயப்படுறியா நான் பயப்படுறேனா?” என சீமான் கேள்வியெழுப்பினார்.