நடிகை ரம்யா மாரடைப்பால் இறந்ததாக வதந்தி: நலமுடன் இருப்பதாக தகவல்!

தான் மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் நடிகை ரம்யா தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. ‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மாண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார். தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது.

இந்நிலையில், நடிகை திவ்யா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என்றும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெனீவாவில் இருக்கும் நடிகை ரம்யாவிடம், இந்த வதந்தி குறித்து விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், தான் ஜெனீவாவில் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு தற்போது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில் தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனீவாவில் இருந்து ப்ரேக் செல்வதாகவும் அதன் பிறகு அவர் பெங்களூரூ திரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார்.