பிரபல நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்!

நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 56.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின. இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மாரிமுத்துவின் இறுதி நொடிகளில் நடந்தது என்ன? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் மாரிமுத்துவுடன் டப்பிங் பணியில் இருந்த ஆடியோ என்ஜினீயர் கார்த்திக் கூறியதாவது:-

இன்று காலை 6.30 மணிக்கு டப்பிங் பணிக்காக மாரிமுத்து வந்தார். வரும்போது அவரிடம் எந்த பிரச்சனையும் இல்லை. உடல்சோர்வும் இல்லை. வழக்கமாக வருவது போல் தான் வந்தார். இதையடுத்து காலை 8 மணி வரை அவர் நன்றாக டப்பிங் பேசினார். 8 மணிக்கு பிறகு ‛எனக்கு முடியல. Suffocation ஆக இருக்கிறது. 10 நிமிடம் ரிலாக்ஸ் ஆக வேண்டும்’ என்றார். ‛ஓகே சார்’ வெளியே ‛ரெஸ்ட்’ எடுங்கள் என கூறினோம். அவர் வெளியே புறப்பட்டார். இதையடுத்து எதிர்நீச்சல் ‛கமலேஷ்’ சார் டப்பிங் பேசுவதற்கான பணி தொடங்கியது. இந்த வேளையில் வெளியே வந்து பார்த்தபோது நடிகர் மாரிமுத்துவை காணவில்லை. இதுபற்றி விசாரித்தபோது தான் காரில் மருத்துவமனைக்கு சென்றது தெரியவந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.