‘அயலான்’ படம் தனித்துவமான அனுபவத்தைத் தந்தது: ரகுல் ப்ரீத் சிங்

‘அயலான்’ படம் தனித்துவமான அனுபவத்தைத் தந்தது. நான் அதை முழுமையாக ரசித்தேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்.ஜி.கே’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்திலும் நடித்திருக்கிறார். தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

ரவிகுமார் இயக்கியுள்ள இந்த சயின்ஸ் பிக்‌ஷன் படம் பற்றி பேசிய ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது, “இது வழக்கமான திரைப்படம் இல்லை. சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் இதில் கிடைத்தது. அதை என்னால் விவரிக்க முடியாது. ரசிகர்கள் நம்பும்படியாக இதன் கதையைப் படமாக்கி இருக்கிறார்கள். கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான வேலையும் அதிகம். அதனால் இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தைத் தந்தது. நான் அதை முழுமையாக ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘அயலான்’ படத்தில் சரத் கெல்கர், இஷா கோபிகர், பானுப்பிரியா, யோகிபாபு, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.