மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்

மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

சென்னையில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளின் நலன் விரும்பும் கட்சியாக தமாகா செயல்பட்டு வருகிறது. கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். வளமான தமிழகம், வலிமையான பாரதத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய பொதுவான கருத்து.

எனினும், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பல கூட்டணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் சகஜமாக இருக்கிறது. பல தோ்தல்களில் முரண்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் பாா்க்க முடிகிறது. தமாகாவைப் பொருத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளோடும் இணைந்தே செயல்பட்டு வருகிறோம். கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.