தமிழக மீனவர்களை மீண்டும் கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான படகில் நேற்று காலை அரிகிருஷ்ணன், கண்ணன், சூர்யா, சக்தி பாலா, சீரஞ்சீவி ஆகிய 5 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு இரண்டு அதிவேக படகுகள் மூலம் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து மீனவர்களின் படகில் ஏறி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் மீனவர்களை தாக்கி, மீன்வலைகள், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, பிடித்து வைத்து இருந்த மீன்கள் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். மீன்களை கொடுக்க மறுத்த போது இரும்பு பைப்களை கொண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவகர்கள் அச்சத்துடனே மீன் பிடிக்க வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பிரகாஷ், பிரதீப், பிரவீன், திருமுருகன் ஆகிய மீனவர்கள் கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தும் தமிழக மீனவர்கள், இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.