நடிகை ஜனனியை ஏமாற்றிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!

அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜனனியை ஒரு பிரபல நிறுவனம் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார்.

நடிகை ஜனனி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து தெகிடி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனனி ஐயர் என இருந்த அவரது பெயரை ஜனனி என 2014ல் மாற்றிக்கொண்டு பேசுபொருளானார். அவரின் இந்த செயல் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஒரு பிரபல நிறுவனம் முறையான சேவையை செய்யாமல் அலைக்கழைத்ததாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை ஜனனி. அழகு சாதனங்களை விற்கும் ஆன்லைன் தலமான நைகாவில் ஏராளமான அழகு சாதன பொருட்களும் ஆடைகளும் விற்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி வாய்ந்த தளமாகவும் நைகா இருந்து வருகிறது. இன்றைய சூழலில் அதிகப்படியான பெண்கள் இந்த தளத்தின் மூலமாகவும் பிற தளத்தின் மூலமாகவும்தான் அவர்களுக்கு தேவையான அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ஜனனி நைகாவில் வேறு நாட்டிலிருந்து ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பெறப்பட்ட பார்சலில் பழுதடைந்த சில பொருட்கள் இருந்துள்ளது. இதை பற்றிய பதிவை நைகா அனுப்பிய மின்னஞ்சலோடு பதிவிட்டிருக்கிறார் நடிகை ஜனனி. அதில், பிற நாட்டு பொருளை முதன்முறையாக நைகாவிலுருந்து பெற்ற ஜனனிக்கு அதிர்ச்சியாக மிகவும் பழுதடைந்த பொருளே கிடைத்துள்ளது. மேலும் இதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் சரியான பதில் இல்லையென கோவமடைந்துள்ளார் ஜனனி.

இது போன்ற பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்கவும் அவர்களிடம் பேசவும் தேவையான வசதி இல்லை. மாறாக, கம்ப்யூட்டர் அனுப்பும் மெசேஜ் மட்டும்தான் கிடைப்பதாக அவர் பதிவிட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை புகார் மெயில் அனுப்பும்போதும் 48 மணிநேரத்தில் இந்த சிக்கல் சரிசெய்யப்படும் என பதில் மெயில் வந்ததாகவும், இது நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் நிவர்த்திசெய்யப்படவில்லை எனவும் அவர் பதிவிட்டிருக்கிறார். மேலும், நைகாவில் ஆர்டர் செய்யபோவதே இல்லை எனவும் அவர் அந்த பதிவில் மிகவும் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.