அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் ஏ ஆர் ரகுமான் மீது புகார்!

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானின் மேலாளரும், ‘தி குரூப்’ நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அண்மையில் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் ஒரு நாள் இரவு போக்குவரத்து நெரிசலால் முடங்கியது. விழா நடந்த இடத்திலும் டிக்கெட் பெற்றவர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது. பலர் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் போலி டிக்கெட்டை பயன்படுத்தி உள்ளே வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தின் இந்த குளறுபடிகளுக்கு ஏஆர் ரகுமானே முழுமையாக பொறுப்பேற்று பதில் அளித்தார். டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்படி பணமும் திருப்பி அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வளவன் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெறாமல் போனது. இதனிடையே இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் தரப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனஏ.ஆர்.ரகுமானின் மேலாளரும், ‘தி குரூப்’ நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தினரிடம் இருந்து இசை நிகழ்ச்சி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது என்றும் பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பதால், நிகழ்ச்சியை சங்கத்தினர் ரத்து செய்தனர் என்றும் செந்தில் வேலன் கூறியுள்ளார். மேலும் நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் முன்பணத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என அக்ரீமெண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இவை எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என ஏ.ஆர்.ரகுமானின் மேலாளர் செந்தில் வேலன் கூறியுள்ளார்.