மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க உழைப்போம்: பிரதமர் மோடி!

டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் என்று கூறியுள்ளார்.

காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் தனது எக்ஸ் சோஷியல் மீடியாக பக்கத்தில் “காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதாவது, “அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். அதன்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் எனும் உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் மல்யுத்த வீரருடன் சேர்ந்து நேற்று தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து இன்று காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது எக்ஸ் சோஷியல் மீடியா பக்கத்தில், “மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் – பிரதமர் நரேந்திர மோடி. இளைஞர்களுக்கு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று கூறியுள்ளார்.

நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது எளிமையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும், ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற புகழ்பெற்ற முழக்கமும் இன்றும் எதிரொலிப்பதுடன், தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சவாலான காலங்களில் அவரது தலைமைத்துவம் முதலியவை முன்மாதிரியாக உள்ளன. வலுவான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.