சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் விபத்து?

சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் மஞ்சள் கடலுக்கு அடியில் விபத்துக்குள்ளானதாக பிரிட்டன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

அமெரிக்காவின் நீர் மூழ்கிக் கப்பல்களை முடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சீனக் கடற்படையின் அணு ஆயுத நீர் மூழ்கிக்கப்பல் விபத்துக்குள்ளானதாக பிரிட்டன் உளவு அமைப்பு தெரிவித்திருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதனை சீனா மறுத்திருக்கிறது.

21-ம் நூற்றாண்டிலும் கூட அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கும் நாடு சீனா மட்டுமே. இந்தியா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளை தங்கள் பகுதி என்று இப்போது வரை உரிமை கோரி வருகிறது சீனா. அதுமட்டுமின்றி, உலக அளவில் கடல் பரப்பிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கி இருக்கிறது. அந்த வகையில், தென் சீனக் கடலிலும், இந்திய பெருங்கடலிலும் சர்வதேச விதிமுறைகளை மீறி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது சீனா. சீனாவின் இந்த முயற்சிக்கு இந்தியாவும், அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை ஒரே இடத்தில் சிக்க வைப்பதற்காக சீனா சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ”093-417′ என்ற ராட்சத அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. 55 சீனக் கடற்படை வீரர்கள் இருந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல் மஞ்சள் கடலில் (Yellow Sea) சென்று கொண்டிருந்தது அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று திடீரென இந்த நீர்மூழ்கிக் கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் கப்பலுக்குள் ஆக்சிஜன் வாயு செல்வது தடை செய்யப்பட்டதாகவும், இதனால் அதற்குள் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்ததாகவும் பிரிட்டன் உளவு அமைப்பு தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாவதாக கூறப்படுவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. ஆனால், இந்த செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.