பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில் சிலைகள் திருடப்பட்டது: வன்னியரசு!

கோயில் பாதுகாப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ். குரலாக ஒலிக்கும் ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில் சிலைகள் திருடப்பட்டதால் அவரை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து வன்னி அரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்து கோவில்களை அரசு ஆக்கிரமிப்பதாக அவதூறாகவும் தவறாகவும் பேசினார் இந்திய தலைமை அமைச்சர் மோடி. அது உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என தமிழ்நாடு முதல்வர் ஆதாரங்களுடன் மறுத்தார். இந்த சூழலில் ரிட்டையர்டு ஆன போலீஸ் ஆபீசரான பொன்.மாணிக்கவேல் என்பவர் மோடிக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அதுவும் இந்து கோவில்களை பாதுகாக்கப் போவதாகவும் மீசையை தடவிக்கொள்கிறார். பாவம் இன்னமும் போலீஸ் ஆபீசராகவே இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். இவர் சிலை தடுப்பு பிரிவு அதிகாரியாக வேலை பார்த்த போது தான். கோவில் சிலைகள் நிறைய திருட்டுப் போயின. ஒரு திருடனை கூட கைது செய்ய முடியாத இந்த வீராதி வீரன் தான் இப்போது, கோவில்கள் பாதுகாப்பு குறித்து ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறார். ரிட்டையர்டு ஆன பிறகும் நீதிமன்றத்தின் மூலமாக அந்த ஊருல புடிக்கப்போறேன், இந்த ஊருல போயி புடிக்கப்போறேன் என தமது வேலையை நீட்டித்துக்கொண்டாரே தவிர, எதையும் புடுங்கியது போல தெரியவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு சவால் விட்டு பேசியுள்ளார்.

மோடிக்கோ அல்லது பாஜகவுக்கோ சாமரம் வீசுவதால், ஏதாவது பதவி கிடைக்கும் என பாவம் தொங்கப்போட்டு (மீசையை) அலைகிறார். அலையட்டும், அதற்காக அவதூறை பரப்புவது சரியா? 2020 ஆம் ஆண்டில் களவுபோன பல சிலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன. திரு.பொன்.மாணிக்கவேலுவை விசாரிக்கிற விதமாக விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியே வரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.