அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அக். 25ல் ஆலோசனை!

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வருகிற அக். 25 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி கட்சிகள் அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் வாக்காளர் வரைவு பட்டியல் வருகிற அக். 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வருகிற அக். 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.