சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம்: கையெழுத்து போட ஆளுநர் மறுப்பு!

மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு கையெழுத்து போட ஆளுநர் மறுத்துள்ளார். இதனால் மீண்டும் ஆளுநர் – தமிழக அரசு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முட்டுக்கட்டை போடுவதாக ஆளுநர் மீது திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானமே கொண்டு வந்தார். ஆனாலும் ஆளுநர் தொடர்ந்து சமூக நீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

1922 ஜூலை 15ல் பிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமாக இருந்தவர் என். சங்கரய்யா.

நம் தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கெளரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி 1 ல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவ்வத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய பொன்முடி, எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் திரு.என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் மாண்புமிகு ஆளுநர்-வேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

நவம்பர் 2ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திரு.என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார்.