சேப்பாக்கம் மைதானத்திற்கு தேசியக் கொடியை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?: அண்ணாமலை

“தேசியக் கொடியை சேப்பாக்கம் மைதானத்திற்கு கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தலைவராக பதவி வகிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய தேசியக் கொடியை சேப்பாக்கம் மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கேவலமான செயலுக்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே குஜராத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில்தான், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள், இந்திய தேசியக் கொடியுடன் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அங்கிருந்த ரசிகர்களின் கையில் இருந்த தேசியக் கொடிகளை பறித்த ஒரு போலீஸ் எஸ்.ஐ., அவற்றை குப்பை தொட்டியிலும் போட முயன்றார்.

இந்த விவகாரம் தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் அண்ணாமலை காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதே, கோபாலபுரத்து வாரிசு உதயநிதி ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நமது கிரிக்கெட் வீரர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தானில் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை உதயநிதி மறந்திருப்பார் போல. உதயநிதி தான் இப்படி என்றால், அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அசோக் சிகாமணி இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்று, இந்திய தேசியக் கொடியையே அவமதித்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நமது தேசியக் கொடியை எடுத்துச் செல்வதற்கு கூட ரசிகர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த உரிமையை கொடுத்தது யார்? மேலும், ஒரு போலீஸ் அதிகாரி இந்திய தேசியக் கொடிகளை குப்பைத் தொட்டியிலும் போட முயன்றிருக்கிறார். தேசியக் கொடியை அவமதித்த போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக சார்பில் நான் வலியுறுத்துகிறேன். மேலும், இதற்காக மக்களிடம் திமுகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இல்லையென்றால், நமது தேசியக் கொடியை அவமதித்த ஊழல் திமுக அசுக்கு எதிராக தமிழக பாஜக பெரிய அளவில் போராட்டம் நடத்தும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.