கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்: மு.க.ஸ்டாலின்

இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அதில், பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள்.தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றியிருப்போம் .
சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது. தியாகிகளை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கிறார்கள் என கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ். இது 1801-ஆம் ஆண்டு.

திமுக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி கைவண்ணத்தில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது. திமுக அரசு அமையும் போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது.

நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார். இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.