தமிழக ஆளுநரின் மாண்பு காக்கப்பட வேண்டுமே ஒழிய, தாக்கப்படக்கூடாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உரசல் இருந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போடாதது முதல் இப்போது கடைசியாக சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஒப்புதல் அளிக்காதது வரை ஆளுநருக்கும், அரசு தரப்புக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், திமுகவின் திராவிடக் கொள்கைகளை பொதுவெளியில் விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஆர்.என். ரவி.

நேற்று முன்தினம் கூட ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்வதாகவும், அவர்களை ஒரு ஜாதி வளையத்துக்குள் வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கு திமுக தலைவர்கள் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்த சூழலில், நேற்று கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு வீசிய நபரை அங்கிருந்த போலீஸார் துரத்திப் பிடித்தனர். இதில் அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்யாத ஆத்திரத்தில் பெட்ரோல் வெடிகுண்டை தான் வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளான். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும், செயல் வன்முறைகளும் சமீபகாலமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடயைது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கலவரத்தால் அல்ல.. இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டுமே தவிர, தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.