அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் பலி!

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி ஆன்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் அலுவலகம் 2 புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.
அதில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்நபர் சம்பவத்திற்கு பின் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த மர்ம நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அடையாளம் காட்டும்படி பொதுமக்களிடம் ஷெரீப் கேட்டு கொண்டுள்ளார்.

நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைக்க பெற்றதும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் நேற்றிரவு அறிவுறுத்தி உள்ளனர்.