ரஷ்யா திடீரென மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது!

ரஷ்யா அரசு நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளது. அதோடு மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ஒத்திகையையும் அந்த நாடு மேற்கொண்டு உள்ளது .

ரஷ்யாவின் அணுசக்தி சோதனைக்கு எதிராக அந்த நாடு உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது . உலகளாவிய தடைகளை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா செய்து இருந்தது. அதாவது அணு ஆயுதங்களை தயாரிப்போம், ஆனால் அணு ஆயுத ஒத்திகையை மேற்கொள்ள மாட்டோம் என்று ரஷ்யா இந்த ஒப்பந்தம் செய்து இருந்தது. நேற்று அந்த ஒப்பந்தத்தை முறிப்பதாக ரஷ்யா நாடாளுமன்றத்தில் முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதன் மூலம் அந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ரஷ்யா அரசு நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளது. ரஷ்ய ராணுவத்தின் முப்படைகள் மூலம் மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ஒத்திகையையும் அந்த நாடு மேற்கொண்டு உள்ளது .

நிலத்தில் இருந்து ஏவுகணை லாஞ்சர் சிலோ வழியாக ஏவுகணையை ஏவி சோதனை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களில் இருந்து ஏவுகணைகளை சோதனை முயற்சியாக ஏவுதல் உள்ளிட்ட பயிற்சிகளை நேற்று ரஷ்யா மேற்கொண்டது. அதாவது நிலம், நீர், ஆகாயம் என்று மூன்று படைகளில் இருந்தும் ரஷ்யா இந்த அணு ஆயுத தாக்குதல் ஒத்திகையை மேற்கொண்டது. அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஒத்திகையை மேற்பார்வையிட்டார். ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி முறியடிப்பது, ரஷ்யா எப்படி மற்ற நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதலை தேவைப்பட்டால் நடத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் இதில் ஒத்திகை செய்யப்பட்டன. உக்ரைன் – ரஷ்யா போர் உச்சத்தில் உள்ளது. பாலஸ்தீனம் – இஸ்ரேல் போரும் உச்சத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த அணு ஆயுத ஒத்திகை கவனம் பெற்றுள்ளது. எங்கே புடின் தனது அணு ஆயுத சூட்கேசில் இருக்கும் சிவப்பு பட்டனை அழுத்த போகிறாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என்று இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நான் சொன்ன கருத்துக்கு பலர் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றனர். தாங்கள் வைத்ததுதான் சட்டம்.. நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது. இரண்டு தரப்பும் அமைதியை இழந்துள்ளது, என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் சீனா சென்றுள்ளார். நேற்று புடின் – ஜி ஜிங்பிங் இடையே ஏற்கனவே கூட்டம் நடந்தது. இவர்கள் இடையே நேற்று 30 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத சூட் கேஸுடன் சென்றுள்ளார். எப்போதும் அவர் இதே சூட் கேஸுடன் அவர் வெளியே செல்வார் என்றாலும்.. இப்போது இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அவர் இதே சூட் கேஸுடன் சென்றுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் கையில் சூட் கேஸ் வைத்துள்ள வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளன.