நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஐம்பது நாட்களில் ஐம்பது லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறும் இந்த திட்டத்தை திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இதில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, ல‌ஷ்மி நாராயணன் அமர்வு விடுமுறை முடிந்த பின்னர், தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.