இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை!

உளவு பார்த்த புகாரில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை, கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைது கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் இருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்குக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்திருக்கிறது.