உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம்: ரிஷி சுனக்!

உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக ஓராண்டை நிறைவு செய்திருக்கும் ரிஷி சுனக் செயற்கை நுண்ணறிவு குறித்த தனது கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது:-

தொழிற்புரட்சி, மின்சாரம் கண்டுபிடிப்பு, இணையத்தின் தோற்றம் போல செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பும் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். புதிய வகை செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆய்வு செய்வதிலும், சோதனை செய்வதிலும் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதால், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து விளங்கும்.

செயற்கை நுண்ணறிவானது பல்வேறு முன்னேற்றங்களை வழங்கும் அதே சமயம் பல்வேறு ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதை செயற்கை நுண்ணறிவு எளிதாக்கும். பயங்கரவாத குழுக்கள் இதனைப் பயன்படுத்தி பெரிய அளவில் அழிவைப் பரப்ப முயற்சிக்கலாம். இத்தகைய கடும் சவால்களையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிவித்த ரிஷி சுனக், “இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகின் அறிவை மேம்படுத்தும். மேலும் இது புதிய ஏஐ வகைகளை கவனமாக ஆய்வு செய்து, சோதிக்கும்” எனக் கூறினார்.