மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது படகில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனராம். இவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, மாலத்தீவு கடற்படையினர் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.