திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: சசிகலா

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இப்போது மீனவர்கள் நலன் குறித்து பேசுகிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா. இதையடுத்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

2 ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு வராத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மட்டுமே வருகை தருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனினும் விருப்பப்பட்டவர்கள் பசும்பொன் வருவதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் சமயத்தில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமாடுகிறதா என கேட்டால் எனக்கு அப்படித் தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் நிச்சயம் இருந்திருப்பார்கள். அப்போது வேற்று நபர் அருகே வரும் வரை காவலர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை அவரை முன் கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்திருக்கலாம்.

யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டியது. நீங்களும் நானும் தனிமனிதராக எதுவும் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி பிரதமராவது என்பது அவர்களின் ஆசை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் உள்ளது. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தை போல்தான். அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை. இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இப்போது மீனவர்கள் நலன் குறித்து பேசுகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றவில்லை, திமுக வகுத்த திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறோம் என உதயநிதி கூறுகிறார்.இது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் போதுமே. எடப்பாடியிடம் இருக்கும் அதிமுகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக கூறுகிறீர்கள். ஆனால் சிவில் வழக்கு தீர்ப்பு இன்னும் வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தால்தான் இறுதி முடிவு என தேர்தல் ஆணையமே சொல்லியுள்ளது. தேர்தல் வருகிறது. விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.