காசாவில் இன அழிப்பு நடப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ராஜினாமா!

காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு எக்ஸ் தளம் வாயிலாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜபாலியா முகாம் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் ஜொனாத்தன் கான்ரிக்கஸ் கூறுகையில், “பியாரியை வீழ்த்தியது மிகவும் முக்கியமானது. அதே வேளையில் பக்கவாட்டு சேதாரமாக பொதுமக்களும் உயிரிழக்க நேர்கிறது. நேற்றைய தாக்குதலில் பியாரி உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் தீவிரவாதிகள். பக்கவாட்டு சேதாரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.

ஆனால் இப்ரஹிம் பியாரி வீழ்த்தப்படவில்லை என்று ஹமாஸ் கூறுகிறது. ”இஸ்ரேல் போலித் தகவலைத் தெரிவிக்கின்றது. ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரெய்க் மொக்கிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்டோபர் 28ல் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய அவர், “காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது. அங்கே அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுகின்றனர். இந்தத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள் ஆதரித்து வருகின்றன. மோசமான தாக்குதலை அவை இணைந்து அரங்கேற்றுகின்றன. அதைத் தடுக்க முடியாத ஐ.நா.வில் இருந்து நான் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போரில் இணைந்த ஹவுத்தி படையினர்! ஜபாலியா முகாம் மீதான தாக்குதலை ஈரான், எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் செய்துவருவதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன. காசாவில் லட்சக்கணக்கான அப்பாவிகள் வாடுகின்றனர். அவர்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையாவது இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. போரில் படுகாயமடைந்தவர்களை ராஃபா எல்லை வழியாக சிகிச்சைக்காக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையை எகிப்து முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையில், ஹமாஸுக்கு ஆதரவாக போரில் இணைந்துள்ளதாக ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகள் அறிவித்துள்ளன.