திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருகிறது: அண்ணாமலை கண்டனம்!

பாஜக கொடிக் கம்பத்தை அமைக்க விடாமல் திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே புதிதாக வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பாஜக கொடி கம்பம் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும் என்றும் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் கொடிக் கம்பங்களை நிறுவ முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷனில் அனுமதியின்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்க முயன்ற 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாஜக கொடிக் கம்பத்தை அமைக்க விடாமல் திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழ்நாடு பாஜக பின்வாங்கப் போவதில்லை.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.