மதுரை ஆதீனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியாதனந்தா சீராய்வு மனு தாக்கல்!

மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள மதுரை ஆதீனத்தை ஏற்க முடியாது; நான் தான் மதுரை ஆதீனம் என்றும் கூறி உள்ளார்.

நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவிற்கு, மதுரை ஆதீனம், அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதினத்தின் 292ஆவது ஆதினமாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார். பின்னர் மதுரை அதீனத்தின் 293ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் நியமித்தார். இந்த நியமனம் கடும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் அவரை அப்பொறுப்பில் இருந்து அருணகிரிநாதர் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.