ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு தி.மு.க.விற்கு பொருந்தாதா?: நாராயணன் திருப்பதி!

சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பாக பாஜகவினர் கொடிக்கம்பம் அமைத்தனர். உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட அந்த கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 100 நாட்களில் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கொடி கம்பம் நட இன்று பாஜகவினர் ஆயத்தமாகினர். சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல் துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் அனுமதி கடிதம் இணைக்கப்படவில்லை என காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கொடிக் கம்பம் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே அனுமதியுள்ள இடங்களில் கூட புதிய கொடிக் கம்பம் வைக்க போலீஸார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அனுமதியுடன் கொடிக்கம்பம் அகற்றப்படும் என போலீசார் எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஆளும் திமுக விதிகளை பின்பற்றாமல் கொடிக்கம்பம் வைத்து இருப்பதாகவும் இதை உடனே அகற்ற வேண்டும் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பாஜக மாநிலத்தலைவரின் இல்லத்தருகே கொடி கம்பம் அமைத்து பாஜக கொடியேற்ற பல முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுத்த தி மு க அரசு, யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை 300 க்கும் அதிகமான காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு பாஜகவினரை கைது செய்து சிறையிலடைத்தது. மேலும், தமிழகம் முழுதும் இன்று பல மாவட்டங்களில் கொடியேற்ற முனைந்த பாஜக நிர்வாகிகளை, தொண்டர்களை கைது செய்து சிறையிலடைத்து வருகிறது பாஸிஸ திமுக அரசு. பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு ஆணைகளையும் குறிப்பிட்டு அதனால் அனுமதி மறுக்கப்படுவதாக சொல்கிறது.

கீழே உள்ள புகைப்படம் – மூன்று நாட்களுக்கு முன்னர் கடந்த 29/10/2023 அன்று சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராலும், மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு தி மு க விற்கு பொருந்தாதா? சட்டத்தை மதிக்காதா தி மு க? இந்த கொடிக்கம்பம் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சட்டத்தை மீறி கம்பம் அமைத்து கொடியேற்றிய அனைத்து தி மு கவினரையும் கைது செய்ய வேண்டும் ஸ்டாலின் அரசு. தங்களை நடுநிலையாக செயல்படுவதாக அழைத்து கொள்ளும் சில ஊடகங்கள், இந்த விவகாரம் குறித்து அரசை கண்டிக்குமா? தி மு க கூட்டணி கட்சியினர் இது குறித்து வாய் திறப்பார்களா? தி மு க அரசின் அராஜகம் இது!! ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவலம் இது!!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.