அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று (நவ.2) காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறாக அத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில், பாஜகவின் வலியுறுத்தலின்படி 4 மாநிலத் தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தனக்காக சம்மனை அமலாக்கத் துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கெஜ்ரிவால் இன்று மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பிரச்சாரத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஜராவாரா இல்லை திட்டமிட்டபடி பிரச்சாரத்துக்கு செல்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது பற்றி அக்கட்சி வட்டாரம் மவுனம் காத்து வந்தது.

இதற்கிடையில், டெல்லி சமூகநலத் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுங்கத் துறை சம்பந்தமான இந்த வழக்கில் அமைச்சர் ஆனந்த் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் நிமித்தமாகவே சோதனை நடைபெறுகிறது.