தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை சிப்காட் போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம்(24). தனியார் ஷிப்பிங் நிறுவன ஊழியர். இவருக்கும் தூத்துக்குடி திருவிக நகர் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும், கடந்த திங்கள்கிழமை கோவில்பட்டியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பெண் வீட்டாரருக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டுக்கு இன்று மாலை வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வம்- கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், டிஎஸ்பிக்கள் சுரேஷ், சத்யராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.