அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா மேல்முறையீட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தொடர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தரப்பு வாதத்தை முன்வைத்தது. மேலும், கட்சியில் இருந்து தன்னை நீக்கவோ, கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரமில்லை எனவும் சசிகலா தரப்பு தெரிவித்தது.

கடந்தாண்டு ஜூலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நீக்கப்பட்டு, சட்டவிதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை நாளைக்கு (நவ.03) ஒத்திவைத்துள்ளார்.