தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில்: சு.வெங்கடேசன் கண்டனம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில் இயக்கப்படுவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வழக்கம் போல இந்த முறையும் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இத்தனை பேருக்கும் போதுமான அளவில் அரசு பேருந்துகள் இருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். அதேபோல இந்த பற்றாக்குறையை போக்க தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சொற்ப வருமானத்திற்காக அன்றாடம் கடுமையாக உழைப்பை கொடுக்கும் சாமானிய மக்கள்தான் சென்னையில் அதிகம். இந்த மெஜாரிட்டி மக்களால் தனியார் பேருந்துக்கு செலவழிக்க முடியாது என்பதே யதார்த்தமாக இருக்கிறது. எனவே இவர்கள் ரயில்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். கொஞ்சம் அட்ஜஸ் செய்து ஒரு நாள் தூங்காமல் படிக்கட்டிலேயோ, அல்லது பொட்டி படுக்கை வைக்கும் ரேக்குகளிளோ ஒதுங்கி உட்கார்ந்துக்கொண்டால் வீடு போய் சேர்ந்துவிடலாம் என ரயில் பயணங்களை மேற்கொள்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் சென்னையிலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இது பலரையும் குழப்பியது.

இந்நிலையில் இது குறித்து மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை வைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால் தென்னக ரயில்வேயின் தலைமை அதிகாரிகள் அப்படி ஒரு ரயில் இயக்க நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று எனக்கு பதில் கூறியுள்ளனர். அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முன்பெல்லாம் ரயில்வே நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அன்றாட ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தது. கொரோனாவிற்கு பின்பு சிறப்பு ரயில்களை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் என்று பெயர் வைத்து பெரும் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கிறது. பொதுமக்களின் அவசரத் தேவையை அதீத லாபத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறது.

இந்திய ரயில்வேயின் அன்றாட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விட்டார்கள். தட்கல் பிரிமியம் என்று கட்டணத்தை அன்றாட ரயில் வண்டிகளிலும் கடும் உயர்வை ஏற்படுத்தி விட்டார்கள். டிக்கெட் விற்று பெருலாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.