காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை கோரியுள்ள ஜி7 நாடுகள்!

பொருளாதாரத்தில் முன்னேறிய 7 நாடுகளும் கலந்து கொண்ட ஜி7 கூட்டம் ஜப்பானில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் நாடுகளிடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 2 நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று (நவ.8) ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்.7 ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஒரு மாத காலமாக காசாவில் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை கோரியுள்ளன ஜி7 நாடுகள். ஆனால், போர் நிறுத்தம் என்பது குறித்து இந்நாடுகள் பேசவில்லை. அமெரிக்காவின் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பின்போது, ஹமாஸை அக்.7 தாக்குதல் நடத்தும் பலத்தோடு விடுவது என்பது மீண்டும் மீண்டும் அதை நடக்க விடுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “உடனடியாக மக்களுக்குத் தேவைப்படும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் பிணைக்கைதிகளை விடுவிக்கப்படவும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை ஆதரிக்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்டங்களை குறிப்பாக சர்வதேச மனிதத்துவ சட்டத்தைக் கடைப்பிடிப்பதை நாங்கள் அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார் ஆண்டனி பிளிங்கன்.

ஜி7 நாடுகளின் அமைச்சர்கள் ஹமாஸின் தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு காசாவின் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசியுள்ளனர். காசாவில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,000-த்தைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் ஹமாஸை அழிக்கும் நோக்கத்தையும் ஆதரித்துள்ள அமெரிக்கா, மனிதத்துவ அடிப்படையில் போர் இடைவெளியைக் கோரி வருகிறது. அமெரிக்காவின் இந்த கோரிக்கையைத்தான் ஜி7 நாடுகள் முன்வைத்துள்ளன.