காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழையத் தடை!

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், நவம்பர் 18 வரை டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்கள் மூலமாக சேவை வழங்கும் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் நிலவும் கடுமையான காற்றின் தரம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதகமான வானிலை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இருதரப்பினரும் வீட்டில் இருக்க முடியும். இந்தத் தகவலை உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அனைத்து துறைகளின் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. அதையடுத்து பேசிய அமைச்சர் கோபால் ராய், “மாசுபாட்டைக் குறைப்பதற்கு கூட்டுப் பணி இருக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறேன். டெல்லியில் சுற்றுசூழல் விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறோம். ஆனால், அண்டை மாநில அரசுகளும் அதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். அறிக்கைகள் மூலம் மட்டுமே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பா.ஜ.க விரும்புகிறது.” என்று அவர் தெரிவித்தார்.