தீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார்: மா.சுப்பிரமணியன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதுக்குரிய நேரம், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விபத்துகள் நேராத வகையில் இந்த தீபாவளி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அனைவரும் கருதுகிறோம். அதையும் மீறி எங்கேயாவது தீ விபத்துகள் ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதேபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என்று 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்து சிகிச்சைக்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் அறுவை சிகிச்சை அரங்குகள் தயார் நிலையில் உள்ளது.

2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 15 பேர் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். 2021ஆம் ஆண்டு 30 பேர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்பு எதுவும் இல்லை. 2022 ஆம் ஆண்டு 38 பேர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி தீ விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.