தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் தங்கம் தென்னரசு. இவர் இதற்கு முன்பு கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த திமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தான் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது. இதனால் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் வழக்கிலிருந்து தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு அவரின் மனைவிக்கு உத்தரவிடபட்டுள்ளது. இதற்கிடையே தாமாக முன்வந்து எடுத்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீடு தொடர்பாக விபரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது என தெரிவிக்கபட்டது. இதையடுத்து இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதுமட்டுமின்றி வழக்கின் வாதங்களை தொடங்க அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதன்மூலம் வழக்கு தொடர்பாக தங்கம் தென்னரசு தரப்பிலான வாதங்கள் உயர்நீதிமன்றத்தில் வரும் 28 ம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.