மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் முகம்தான் வரும்: பூபேஷ் பகேல்

மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியதாவது:-

பிரதமர் மோடி சத்தீஸ்கருக்கு வந்து என்மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறு சுமத்திக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஏன் தயங்குகிறார் என பதில் சொல்லவேண்டும். அவர் மிகவும் பொறுப்பான பதவியில் இருப்பதால், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. மகாதேவ் செயலிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், குற்றவாளிக்கு எதிராக நாங்கள் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். குற்றவாளியை பிடிப்பது மத்திய அரசின் கடமை. பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களைக் கூறி வருகிறார். நவம்பர் 17-ஆம் தேதி வரை இது தொடரும். மிகப்பெரிய பொய்யர் என்று தேடினால் மோடியின் முகம்தான் வரும். அப்படி பொய் கூறியும் அவர்களால் எதிர்க்க முடியாதவர்களை அமலாக்கத்துறையை வைத்து முடக்குவர். அவர்களால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று நன்றாகத் தெரியும். மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.