சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமான் திரைத்துறையில் இருக்கும் போது தன்னை காதலித்து, தன்னுடன் நெருக்கமாக இருந்து பின்னர் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 12 ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு போலீஸிலும் புகார் அளித்தார் விஜயலட்சுமி. ஆனால், அதனை சில மாதங்களில் வாபஸ் பெற்று விட்டார். இருந்தபோதிலும், சீமானை தரக்குறைவாக திட்டியும், ஒருமையில் பேசியும் மாதத்திற்கு ஒரு வீடியோவை வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி. ஆனால், விஜயலட்சுமியின் இதுபோன்ற செயல்களை சீமான் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினாலும், கிண்டலும், கேலியுமாக பதிலளிப்பதை சீமான் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் பொறுமை இழந்த விஜயலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக சீமான் மீது புகார் அளித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சீமான் கைது செய்யப்படுவார் என்ற பேச்சுகளும் அடிபட்டது.

ஆனால், விஜயலட்சுமி என்ற நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே திரும்பினார். புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சீமானுடன் என்னால் சண்டையிட முடியவில்லை. எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. அதனால் நான் பெங்களூருக்கே செல்கிறேன். மீண்டும் திரும்பி வர மாட்டேன். சீமான் அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” எனக் கூறிவிட்டு சென்றார். இதனிடையே, சீமானிடம் விஜயலட்சுமி செட்டில்மெண்ட் வாங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விஜயலட்சுமியிடம் இருந்து சீமான் தொடர்பான எந்த வீடியோவும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் விஜயலட்சுமி. ஆனால், முன்பு போல சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் அவர் கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசுகையில், “சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது வழக்கு தொடுத்தால், எந்த ஆக்சனையும் போலீஸ் எடுக்குறதில்ல. 2011-இல் சீமான் மீது நான் புகார் கொடுத்த போதும், இதே மாதிரிதான் ஒரு துரோகத்தை சந்திச்சேன். இப்போ 2023-ம் வருஷமும் சீமான் மீதும், அவரது கூட்டாளி மதுரை செல்வம் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கே போய் புகார் கொடுத்தேன். ஆனால், மூணு மாசமாகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் யோக்கிதை இல்ல. அதனால இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். தயவுசெய்து சீமான் மீது காவல்துறையினர் யாரும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நான் கேட்டுக்குறேன். இத்தோட சீமான் – விஜயலட்சுமி போரை முடிச்சுக்கலாம்” என அதில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.