இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அகமதாபாதில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்திய அணியைப் போன்றே ஆஸ்திரேலியாவுக்கும் தொடக்கம் சற்று அதிர்ச்சியாகவே அமைந்தது. டேவிட் வார்னர் 7 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில், 43 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இது ஆஸ்திரேலியா வெல்லும் ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பை பட்டம் ஆகும். டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் என இருவரும் அபார கூட்டணி அமைத்து ஆஸி.க்கு வெற்றி தேடி தந்தனர். இதன் மூலம் இந்திய அணியின் கோப்பை கனவை கலைத்தனர்.