ஆவின் நிறுவனம் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: வானதி சீனிவாசன்

ஆவின் நிறுவனம் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் திணிப்பது தான் மக்கள் மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதற்கு பதில் டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது. ஊட்டச்சத்தும் குறைத்து விளையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல. இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.