பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட் பச்சை, ஊதா, ஆரஞ்ச், வயலட் என பல வண்ணங்களில் கிடைக்கிறது. பெரும்பாலோனோர் விலை குறைவாக உள்ள ஊதா, பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே வாங்குகின்றனர். இந்த நிலையில்தான் பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யப்படுகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால், அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படுகிறது. இதனிடையே பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4.5 கொழுப்பு சத்தள்ள பாலை லிட்டர் ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். அட்டைதாரர்கள் டிசம்பர் 15ம் தேதி வரை பச்சை நிற பால் வழங்கப்படும் என ஆவின் நிறுவன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணமலை வெளியிட்டுள்ள அறிகையில் கூறியுள்ளதாவது:-

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், தமிழக பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு என்றும் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.